Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த தகவல் தருவோருக்கு ரூ.11 ஆயிரம் பரிசு: பாஜக எம்.பி. அறிவிப்பு

ஏப்ரல் 26, 2020 01:15

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிக அளவில் பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனால் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தரபிரதேச பாஜக எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா கூறும்போது, “தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் குறித்தோ, வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி அந்தத் தகவலை மறைப்பவர்கள் குறித்தோ தகவல் தருவோருக்கு ரூ.11 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

என்னுடைய சலேம்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தகவலை அளிக்கலாம். மக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை எங்களிடம் அளிக்கலாம். அவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாப்பாக வைக்கப்படும். என்னுடைய 2 தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளேன்.

இதுதொடர்பாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. வைரஸ்பரவக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த பரிசை அறிவித்துள்ளேன். மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

தலைப்புச்செய்திகள்